கோவை வனக்கல்லூரியில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: வனத்துறை விளக்கம்

சந்தன மரம் உட்பட பிற மரங்கள் எதுவும் வெட்டப்பட வில்லை, சீமை கருவேலை மரங்கள் மட்டுமே வெட்டப்பட்டு இருப்பதாக வனக்கல்லூரி முதல்வர் தகவல்

Update: 2021-07-19 14:30 GMT

மரங்கள் வெட்டப்பட்ட இடம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநில வனக்கல்லூரி வளாகம் அமைந்துள்ளது. இதில் கல்லூரிக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த வளாகத்தில் தமிழ்நாடு தலைமை உதவி வன பாதுகாவலர் அலுவலகம், மாவட்ட வன அலுவலர் அலுவலகம், மத்திய அரசின் வனக்கல்லூரி மற்றும் பயிற்சியகம் ஆகியவை இயங்கி வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் வனக்கல்லூரி மற்றும் பயிற்சியகம் உள்ள பகுதியில் மதிப்பு கூட்டப்பட்ட சந்தனமரம் உட்பட பல்வேறு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய வனக்கல்லூரி மற்றும் பயிற்சியகத்தின் முதல்வர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தமிழக அரசிடம் இருந்து நீண்ட கால குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கல்லூரி மற்றும் பயற்சியகம் நடத்தி வருவதாகவும், தற்போது பயிற்சியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மரக்கன்று தயாரித்தல், அதை நட்டு வளர்த்தல் ஆகிய பயிற்சிக்காக ஒரு ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் உள்ள சீமை கருவேலை மரங்கள் மற்றும் சூபபுல் மரங்களை வெட்டிவிட்டு, 6000 க்கும் மேற்பட்ட பிற மரங்களை நட்டு வளர்க்க இருப்பதாகவும் பயிற்சியின் ஒரு பகுதியாகவே இது நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

சந்தன மரம் உட்பட பிற மரங்கள் எதுவும் வெட்டப்பட வில்லை எனவும் சீமை கருவேலை மரங்கள் மட்டுமே வெட்டப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் வரும் வருவாய் தமிழக அரசின் வனத்துறைக்கு அளிக்கப்படும் எனவும், மத்திய வனத துறை அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே இது நடைபெறுவதாகவும் மத்திய வனக்கல்லூரி மற்றும் பயற்சியகத்தின் முதல்வர் ஆனந்த் தெரிவித்தார்.

Tags:    

Similar News