ஆட்டுக்கறி வாங்குனா குடம் ப்ரீ-ஆபர்களை அள்ளிவீசும் அம்மாஅப்பா கறிக்கடை

கோவை அருகே செயல்படும் கறிக்கடை ஒன்றில், ஆட்டுக்கறி ஒரு கிலோ வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் குடம், அரைக்கிலோ கறி வாங்கினால் ஒரு முழு தேங்காய் இலவசமாக வழங்கப்படுகின்றது.

Update: 2021-07-22 04:05 GMT

ஆட்டுக்கறி வாங்குனா குடம் ஃப்ரீ.. கோவையில் ஆஃபர்களை அள்ளிவீசும் அம்மா அப்பா கறிக்கடை

கோவை அருகே செயல்படும் கறி கடை ஒன்றில், ஆட்டுக்கறி ஒரு கிலோ வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் குடம், அரைக்கிலோ கறி வாங்கினால் ஒரு முழு தேங்காய்  இலவசமாக வழங்கப்படுகின்றது. கறி விலையும் குறைவாக இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆட்டுக்கறியை வாங்கி செல்கின்றனர்.

கோவை மாவட்டத்தில்  ஒரு கிலோ ஆட்டுக்கறி 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில்  புதியதாக "அம்மா அப்பா ஆட்டுக்கறிகடை" என்ற பெயரில்  கறிக்கடை  துவங்கியுள்ள ராஜசேகர்  வாடிக்கையாளர்களை கவர கவர்ச்சிகர ஆஃபர்களை அறிவித்துள்ளார்.

மற்ற பகுதிகளில் ஆட்டுக்கறி கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் , தனது கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி 560 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றார். மேலும் நாட்டுக்கோழி  கிலோ 350 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றார். ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் குடமும், அரைக்கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு முழு தேங்காய் இலவசமாக வழங்குகின்றார்.

இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அம்மா அப்பா ஆட்டுக்கறி கடைக்கு குவிந்து வருகின்றனர். விளம்பரத்தை பார்த்து கறி வாங்க வந்ததாகவும் கறியும் நன்றாக இருப்பதுடன் பிளாஸ்டிக் குடம், தேங்காய் போன்றவை இலவசமாக கொடுப்பதால் இது மகிழ்ச்சியளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் இந்தக் கடைக்கு வந்து பொது மக்கள் கறி வாங்கி செல்கின்றனர்.

கறிக்கடை உரிமையாளர் ராஜசேகர் கூறும்போது, " பெற்றோர் மீது பாசம் அதிகம் அதனால்தான் கடைக்கு    "அம்மா அப்பா ஆட்டுக்கறிக்கடை" பெயர் வச்சிருக்கோம். ஆடி மாதத்திற்காக இந்த சலுகைகள் வழங்கவில்லை வாடிக்கையாளர்களை கவரவே இந்த சலுகை கொடுக்கிறோம்.

மற்ற கடைகளில் எடை குறைவான குட்டி ஆடுகளை அறுப்பார்கள் நம்ம கடையில் எடை அதிகமாக ஆடுகளை அறுப்போம். கடையில் உறவினர்கள் மட்டுமே வேலை பார்ப்பதாகவும், அதிக லாபம் இல்லாமல் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும் அளவிற்கு வருவாய்  வருகிறது.

மற்ற கடைகளில் 8 கிலோ விற்கு குறைவான ஆடுகளை அறுப்பதால் அது விரைவில் வெந்துவிடும் நம்ம கடையில் 12 கிலோ முதல் 15 கிலோ வரையிலான எடை அதிகமான குட்டிகளை அறுப்பதால் அதை வேக வைக்க கூடுதல் நேரமாகும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கறியை கூடுதல் நேரம் வேக வைக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி விடுவோம்.

இலவசமாக கொடுக்கும் குடம், தேங்காய் போன்றவற்றை மொத்தமாக வாங்குவதால் பெரிய அளவிற்கு வருவாய் இழப்பு எதுவும் இல்லை" என்கிறார். சூலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  மக்கள் இந்த கடைக்கு வந்து கறி வாங்கி செல்கின்றனர் என தெரிவித்துள்ளார் மேலும் ஆடி மாதத்திற்காக இந்த சலுகைகள் வழங்கவில்லை வாடிக்கையாளர்களை கவரவே இந்த சலுகை கொடுக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News