கோவை அருகே யானை தாக்கியதில் மிதிவண்டியில் சென்ற முதியவர் உயிரிழப்பு

பன்னிமடை - வரப்பாளையம் சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த முதியவரை யானை துரத்தி தாக்கியது. அதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2020-12-16 18:30 GMT

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் ஆல்பா, பீட்டா, காமா என மூன்று சிறப்பு படைகள் அமைத்து யானைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் யானைகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு கோவை பன்னிமடை அடுத்த ஸ்ரீ நகர் பகுதியில் 3 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது. சோளப்பயிர் மற்றும் வாழை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளதால் மேய்ச்சலுக்கு யானைகள் வந்ததாக தெரிகிறது. அப்போது பன்னிமடை - வரப்பாளையம் சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த முதியவரை யானை துரத்தி தாக்கியது. அதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த 63 வயதான சோமசுந்தரம் என்பது தெரியவந்தது.

Tags:    

Similar News