72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விவேக் உடல் தகனம்

சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.

Update: 2021-04-17 15:15 GMT

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளம் சூழ அவருடைய விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. அதில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றனர்.

மாலை 5 மணியளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்திற்கு வந்த விவேக்கின் உடலுக்கு அவருடைய மகள் தேஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். அதை தொடர்ந்து உறவினர்களும் குடும்ப வழக்கப் படி விவேக்கின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

பிறகு காவல்துறை சார்பில் விவேக் உடலுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருக்கு புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும், அவருடைய கலை சமூகச் சேவையை கவுரவிக்கும் நோக்கத்துடனும் 72 குண்டுகள் முழுங்க விவேக்கின் உடலுக்கு காவல்துறையினர் இறுதி மரியாதை செய்தனர்.

இறுதியாக இத்தனை வருடங்களாக மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய சாதனை நாயகனின் பூத உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அதற்கு பிறகு மக்களை மகிழ்வித்த நாயகனின் சகாப்தம் இத்துடன் முடிந்தது என்ற மீளாத துயரத்துடன் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கண்ணீர் மல்க மின்மாயனத்தை விட்டு வெளியேறினர்.

Tags:    

Similar News