கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சரிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க கோரி, டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-07-09 10:31 GMT

திருச்சி சிவா எம்பி ( பைல் படம்)

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க கோரி டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தம் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் தமிழ் கற்க வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பிய போது அவை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், கல்வித்துறை இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.

தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளி குறித்து டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒவ்வோரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தாய்மொழியை படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும். தாய்மொழி பாடத்தை விருப்பப்பாடமாக ஏன் வைக்கக்கூடாது. மேலும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது எனவும் ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News