வீட்டின் முன் பொங்கல் வைத்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

சென்னையில் உள்ள வீட்டின் முன் பொங்கல் வைத்து கொண்டாடினார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

Update: 2022-01-14 13:15 GMT

சென்னையில் உள்ள தனது வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விருகம்பாகத்தில் உள்ள தனது இல்லத்தின் வெளியில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவர் கணவர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என்றும், இது தமிழர் திருநாள், நாளை தெலுங்கானாவில் பொங்கல் நிகழ்வு கொண்டாட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் கொரோனா காரணமாக, பொதுமக்கள் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் அமைவதற்கு வழிவகை செய்த பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இந்நிலையில் சித்திரை 1 அன்று தான் தமிழ் புத்தாண்டு என்றும், தான் அதைதான் எப்போதும் கொண்டாடுவேன் என்றும் பேசினார்.

அதேபோல் புதுச்சேரியில் இணக்கமான அரசு செயல்படுகிறது என்று கூறிய அவர், மருத்துவர் என்பதால் கொரோனா பணிகளை கூடுதலாக கவனித்தேன் என்றும், கூடுதல் நேரம் புதுவையில் செலவிடுகிறேன் என்றும் கூறினார். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெருமைப்பட வேண்டுமே தவிர இதுகுறித்து அவர் வருத்தப்பட வேண்டியதில்லை என்றார்.

தொடர்ந்து பேசுகையில், எந்த மாநிலத்திற்கு சென்றாலும், நான் எப்போதும் தமிழ் மகள் தான், என்றைக்கும் உங்கள் அனைவருக்கும் அக்கா தான் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News