11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது, அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது என்பது குறித்து அமைச்சர் சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.;
சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.
தியாகிகள் ஆர்யா பாஷ்யம் சங்கரலிங்கனார் செண்பகராமன் ஆகியோரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் நாள் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா(எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பான ஓபிஎஸ் அறிக்கைக்கு பதில் அளிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது. ஆனால் ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது என்றும்,
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ் தான் என்றும் கூறினார். இதுதொடர்பாக போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் 4,15,570 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளத்தையும் மத்திய அமைச்சரிடம் எடுத்து கூறி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் கோரிக்கையான, கூடுதல் தொகுப்பாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் அமைச்சரிடம் வைத்துள்ளதாகவும் மா.சு கூறினார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அனைத்து புகைப்பட தரவுகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அளித்து உள்ளதாகவும். எனவே விரைவில் மத்திய அரசு குழு தமிழகம் வந்து, கல்லூரிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதன் பின் தான் மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரிய வரும் என்றார்.
இந்நிலையில், 2000க்கும் மேற்ப்பட்டவர்கள் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,
அதற்காக ட்ரோன் மூலம் கொசு மருந்து அடித்து வருவதாகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதியதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதுகுறித்து அமைச்சர் பரிசீலப்பதாக கூறியுள்ளார்.