பெசன்ட் நகர்: ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன்பலி

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில், ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு, மற்றொருவர் மாயம்.

Update: 2021-09-27 03:00 GMT

ஆந்திராவை சேர்ந்தவர் சைலேஷ்பாபு (17). இவர், தரமணியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அவரை பார்ப்பதற்காக அவரது அண்ணன் மணிபிரகாஷ் (19) மற்றும் உறவினர் பிரணித் குமார் (16) ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

பின்னர், 3 பேரும் சேர்ந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வந்தனர். அங்கு சைலேஷ்பாபு, பிரணித் குமார், ஆகியோர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி இருவரும் மாயமாகினர். இதை பார்த்து மணிபிரகாஷ் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள், நீண்ட நேரம் தேடியும் இருவரையும் மீட்க முடியவில்லை.

இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் படகு மூலம் சென்று கடலில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை சைலேஷ்பாபு உடல் பட்டினப்பாக்கம் பகுதியில் கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாயமான பிரணித் குமாரை தேடி வருகின்றனர். இவர், ஆந்திராவில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News