சென்னை திரும்பிய ராமநாதபுரத்தை சோ்ந்தவரை விமானநிலையத்தில் கைது செய்த அதிகாரிகள்

இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்த குற்றத்திற்காக கைதானார்

Update: 2022-01-13 05:15 GMT

பைல் படம்

இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று குவைத் வழியாக சென்னை திரும்பிய ராமநாதபுரத்தை சோ்ந்தவரை சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனா்.

குவைத்திலிருந்து குவைத் ஏா்லைன்ஸ் விமானம் அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முனிய செல்வம் (37) என்பவரின் பாஸ்போா்ட்டை அதிகாரிகள் சோதனையிட்டனா்.அவா் கடந்த 2021 ஆண்டில் டிரைவா் வேலைக்காக சவுதி அரேபியா சென்றவா்,அங்கிருந்து இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன்நாட்டிற்கு சென்று,அங்கு சில மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் முனிய செல்வத்தை வெளியில் அனுப்பாமல் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினா்.அப்போது அவா், தனக்கு ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது தெரியாது.மேலும் சவுதி அரேபியா நாட்டில்,நான் வேலை செய்த நிறுவனம் கூறியதால் சென்றேன் என்று கூறினாா்.ஆனால் அவருடைய விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை..

இதையடுத்து, இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்த குற்றத்திற்காக சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் முனியசெல்வத்தை கைது செய்தனா். அதோடு மேல்நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.விமானநிலைய போலீசாா் முனிய செல்வம் மீது தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News