விரைவில் உள்ளாட்சித் தேர்தல்; அலுவலர்களை நியமிக்க அதிரடி உத்தரவு
தேர்தல் நடத்தும்அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.;
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் சுந்தரவள்ளி வெளியிட்ட உத்தரவில், தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நாளைக்குள் நியமனம் செய்து விவரத்தை ஆட்சியர்கள் அனுப்ப வேண்டும்.
இதில், ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று தனித்தனியாக அலுவலர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவால், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.