சென்னை டாஸ்மாக் கடைகளில் விற்பனை கண்காணிப்பு: தேர்தல் அதிகாரி பேட்டி

Update: 2021-03-30 09:38 GMT

சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது எவ்வளவு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி, ஆணையர் பிரகாஷ் கூறினார்.

சென்னை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் மற்றும் மாதுபான விற்பனை கண்காணிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. பின்னர் ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணம், பொருட்களை தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சாதாரண நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் எவ்வளவு விற்பனை நடக்கிறது, இப்போது எவ்வளவு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இதுவரை 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 1000 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறை சார்பில் 2 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News