ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு: சென்னைக்கு பன்னோக்கு மருத்துவ குழு வருகை
தமிழ்நாட்டில் 3 நாட்கள் தங்கி இருந்து ஒமைக்ரான் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வர்;
ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக பன்னோக்கு மருத்துவ குழு சென்னை வருகை.மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒமைக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வார்கள் என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட 'ஒமைக்ரான்' வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.கர்நாடகாவில் கடந்த 2-ந்தேதி ஒமைக்ரான் பாதிப்பு தெரியவந்தது. அதன்பிறகு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்பட 17 மாநிலங்களில் பரவியது.
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார்.அப்போது ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக கூறினார். அதன்படி தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வருகிறது.
கேரளா, மஹாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பிஹார், உ.பி., ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு செல்லும் இந்த குழுவானது ஒமைக்ரான் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வரும் குழுவில் மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.மத்திய குழுவில் இடம் பெற்றவர்கள் தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்
இந்த குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளனர். தமிழ்நாட்டில் 3 நாட்கள் வரை தங்கி இருந்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒமைக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வார்கள். ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எங்கெங்கு உள்ளனர். அவர்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், வெண்டிலேட்டர் வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.