இயக்குநர் சங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தள்ளுபடி -சென்னை உயர்நீதிமன்றம்

இயக்குநர் சங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2021-07-02 10:29 GMT

இந்தியன் 2 திரைப்படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி என். சதிஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா தரப்பில், திரைப்படத்துக்கு முதலில் ரூ. 150 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 236 கோடி வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இதுவரை 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ஷங்கருக்கு ஏற்கனவே ரூ. 32 கோடி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியத் தொகையை வழங்கவும் தயாராக உள்ளோம். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் ஷங்கர் தரப்பில், திரைப்படத்தைத் தயாரிக்க ரூ. 270 கோடி செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதனை ஏற்று பட்ஜெட்டை ரூ. 250 கோடியாகக் குறைத்து, படப்பிடிப்பைத் தொடங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியது லைகா நிறுவனம். மேலும் படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவது, நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து, கரோனா பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினால் வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடித்து கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இயக்குநர் ஷங்கர் வேறு படங்களை இயக்கத் தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News