கொரோனா விதிகளை மீறியதாக ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை மீறியதாக ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-16 16:50 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது.அதன்பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினரனால் கடந்த 6 ஆம் தேதி முதல் கடந்த ஒரு வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கில் விதிகளை மீறியதற்காக ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 1,64,329 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1,910 பேருக்கும், 1552 இடங்களில் தேவையின்றி கூடுதல் போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 254 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாதவர் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறியதற்காக 43,417 பேரிடமிருந்து 86 இலட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் 40,148 பேரிடமிருந்து 83 இலட்ச ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொது இடங்களில், சமூக விலகலை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறு காவல்த்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News