1.30 லட்சம் காவலர் குடும்பங்களுக்கு மனநலப்பயிற்சி: டி.ஜி.பி. தொடக்கம்

பல்வேறு காரணங்களால் காவலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருவதைக் தடுப்பதே நோக்கம்

Update: 2021-09-21 17:03 GMT

காவல்துறையில் பணிபுரியும் 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் பேருக்கு மனநலப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை டி.ஜி.பி., சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலாக பணிபுரிகிறார். கடந்த செப் 4ல், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்தவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இவர், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ரூ. 7 லட்சம் ரூபாயை இழந்ததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதேபோல, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்  ஒருவர் பிளேடால் கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் இளம் வயதுடைய போலீசார் தங்களது குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, அதிகாரிகளின், 'டார்ச்சர்' உள்ளிட்ட காரணங்களால், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண டி.ஜி.பி., சைலேந்திரபாபு தீர்வு காண முடிவு செய்தார்.

 முதல் கட்டமாக 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் பேருக்கு, நிறைவு வாழ்வுக்கான மனநலப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்படும், தேசிய மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 112 போலீசார் மற்றும் 134 மனநல ஆலோசகர்களுக்கு, மூன்று மாதங்கள் 'ஆன்லைன்' வாயிலாக, பட்டய பயிற்சி அளிக்க உள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் மூலமாக 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் யாதவ் கண்காணிப்பில் மனநல பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மனநல பட்டயப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, ஆன்லைன் மூலம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News