ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் பாலமுருகன் காலமானார்

முன்னாள் துணை முதல்வர் .ஒ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் காலமானார்.

Update: 2021-05-14 04:13 GMT

பாலமுருகன்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின்  இளைய சகோதரர் பாலமுருகன்(61). இன்று அதிகாலை 4 மணிக்கு பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த பாலமுருகன் அதற்காக சென்னை திருவனந்தபுரம் உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக சென்னைக்கு கொண்டு சென்றால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்ற நிலை ஏற்பட்டது.

அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வேண்டுகோளின்படி அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக ஒப்புதல் அளித்து பெங்களூரில் இருந்து ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை மதுரைக்கு அனுப்பி,அங்கிருந்து பாலமுருகன் ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு பெரியகுளம் தென்கரையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.அவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News