மந்தைவெளி சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜனின் பெயர் சூட்டி முதல்வர் திறப்பு

சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம். சௌந்தரராஜனின் பெயரை சூட்டி தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

Update: 2023-03-24 07:08 GMT

சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம். சௌந்தரராஜனின் பெயரை சூட்டி, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் வாழ்ந்த இல்லம் அமைந்த மந்தைவெளியில் உள்ள சாலைக்கு "டி.எம். சௌந்தரராஜன் சாலை" எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் 1923-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். 1950-ஆம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்த அவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தார்.

டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970– ஆம் ஆண்டு "ஏழிசை மன்னர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும், 1969-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் அவர்களால் "இசைக் கடல்" என்றும் போற்றப்பட்டார். 2003-ஆம் ஆண்டு டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பத்மஸ்ரீ பட்டமும் பெற்றார். தனது குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம்பெற்ற டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் 25.5.2013 அன்று மறைந்தார்.

பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பாடிய புகழ்பெற்றப் பாடல்களை நினைவுகூரும் வகையில் இன்னிசைக் கச்சேரி இன்று மாலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், டி.எம். சௌந்தரரராஜன் அவர்களின் மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார், மகள் மல்லிகா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News