சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தமிழக முதல்வர் நேரில் ஆய்வு

சென்னையில் மழை பாதிப்புகளை தமிழக முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்

Update: 2021-11-26 09:28 GMT

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னையில் நேற்று முதல் பல்வேறு இடங்களிலும் பரவலாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் முழுவீச்சில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில் மழை வெள்ள பாதிப்புகளை தமிழக முதல்வர் இன்று பல்வேறு இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  முதலாவதாக புளியந்தோப்பு பார்த்தசாரதி தெரு சந்திப்பு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.  அதைத்தொடர்ந்து ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு, மேட்டுப்பாளையம் சந்திப்பு ஆகிய இடங்களில் மழை நீர்  வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார்.

 அதை தொடர்ந்து தனது சொந்த தொகுதியான கொளத்தூருக்குச் சென்றார். அங்கு   சிவ இளங்கோ 70 அடி சாலையில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழை நீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து  பெரவள்ளூர் காவல்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார்.  தொடர்ந்து அசோக அவன்யூ., ஜி கே எம் காலனி,  24வது தெரு ஆகிய பகுதிகளில் மழையால் தேங்கிய தண்ணீரை அப்புறபடுத்தும்  பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்  மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News