சென்னை துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு

அனைத்து மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக். 31 முதல் நவ. 6 வரை கடைபிடிக்கப்படுகிறது

Update: 2022-11-06 10:00 GMT

சென்னை,எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சி

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சி  நடைபெற்றது .

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஒரு வாரம், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய விழிப்புணர்வுத்துறை கமிஷனர் அறிவுரைப்படி இந்த ஆண்டும் அக். 31 முதல் நவ. 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா, என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப் பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை எண்ணூர் துறைமுகங்களில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தமிழ் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி சுவரொட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுக ஊழியர்களுக்கான கட்டுரை எழுதுதல், ரங்கோலி மற்றும் விநாடி வினாப் போட்டிகளும் நடத்தப்பட்டன, இதில் அலுவலர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை துறைமுக ஆணையம் "ஒழுங்கு நடவடிக்கைகள்" குறித்த பயிலரங்கம் கடந்த அக். 27 வியாழக்கிழமை நடைபெற்றது . இதில் ஐதராபாத் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அலுவலர் உபேந்திர வென்னம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இளைஞர்களிடையே விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கில் கடந்த அக்.28 வெள்ளிக்கிழமையன்று காமராஜர் துறைமுகம் அருகே உள்ள மீஞ்சூரில் "வாக்கத்தான்" நடத்தப்பட்டது. இதில் மீஞ்சூர் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இதனையடுத்து அக்.31திங்கள் கிழமைதுறைமுக பணியாளர்கள் அலுவலர்கள் அனைவரும் ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இறுதி நிகழ்ச்சியாக சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் ஆகியவற்றில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு வார விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழா சனிக்கிழமை சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது .இதில் தமிழக வணிகவரித்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தீரஜ் குமார் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மேலும் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு குரல் என்ற கையேட்டினை தீரஜ் குமார் வெளியிட்டார். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டன .இந்நிகழ்ச்சியில் சென்னை துறைமுகத் துணைத்தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் , சென்னை துறைமுக ஊழல் தடுப்பு அதிகாரி முரளி கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News