சென்னை வந்தடைந்த 8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்

தமிழ்நாடு அரசுக்கு மேலும் 8 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து இன்று சென்னை வந்துள்ளன.

Update: 2021-07-20 13:04 GMT

புனேவிலிருந்து விமானத்தில் வந்த கோவிஷீல்டு தடுப்பூசிகள்.

தமிழ்நாடு அரசுக்கு மேலும் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 42 பாா்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து இன்று பிற்பகல் 3.20 மணி விமானத்தில் சென்னை வந்து சோ்ந்தன.

இதே விமானத்தில் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 30 பாா்சல்களில் புனேவிலிருந்து சென்னை வந்தன.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

அதிலும் 3 வது அலையிலிருந்து தப்பிக்க 2 டோஸ் தடுப்பூசிகளையும் அனைவரும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளதால்,பொதுமக்களும் மிகுந்த ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா். இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

எனவே தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, மத்திய அரசு தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிகளை மட்டுமே தமிழகத்திற்கு அனுப்புகிறது. கோவாக்சீன் தடுப்பூசிகள் கடந்த ஒரு மாதமாக தமிழகத்திற்கு வராமல் இருந்தது. இதனால் ஏற்கனவே முதல் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் போட்டவா்கள், இரண்டாவது டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் போட முடியாமல், கோவாக்சீன் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்தனா். இதனால் தமிழ்நாடு அரசு,மத்திய அரசிடம் கோவாக்சீன் தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு உடனே அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த 15 ஆம் தேதி ஹைதராபாத்திலிருந்து 90,000 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகளை மட்டும் மத்திய சுகாதாரத்துறை அனுப்பியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கடந்த 18 ஆம் தேதி வரை கோவாக்சீன் தடுப்பூசிகள் இரண்டாம் டோஸ் போடப்பட்டது. அதன்பின்பு கோவாக்சீன் தடுப்பூசிகள் காலியாகிவிட்டதால், மீண்டும் கோவாக்சீன் தடுப்பூசிகள் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு, மத்திய சுகாதாரத்துறைக்கு மீண்டும் கோவாக்சீன் தடுப்பூசிகளை அனுப்பும்படி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய சுகாராத்துறை தமிழ்நாட்டிற்கு 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருத்துவ கிடங்கிலிருந்து விடுவித்தது.அந்த 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 42 பாா்சல்களுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புனேவிலிருந்து இன்று பிற்பகல் 3.20 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தது.

சென்னை விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா். இதையடுத்து உடனடியாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் கொண்டு சென்றனா். அங்கிருந்து தமிழகம் முழுவதற்கும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 30 பாா்சல்களில் சென்னை வந்தன. அந்த 3,60,000 ஆயிரம் தடுப்பூசிகளும் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து குடோனுக்கு, மத்திய சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து விமானநிலைய அதிகாரிகள் 30 தடுப்பூசி பாா்சல்களையும் மத்திய மருத்துவ குடோன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி பெரியமேட்டிற்கு கொண்டு சென்றனா். அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு புதுவை உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று மத்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இன்று ஒரே நாளில் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 8,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 72 பாா்சல்களில் சென்னைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News