வெப்பச்சலனம்: தமிழகத்தில் சூறை காற்றுடன் கூடிய மழை பெய்யும்- வானிலை

வெப்பசலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சூறை காற்றுடன் மழைபெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-05-21 11:47 GMT

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி (5.8 முதல் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை) காரணமாக  கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.

ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இங்களில் கன மழையும், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தமிழகம், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

24ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

25ம் தேதி தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாவதன் காரணமாக தமிழக பகுதிகளில் தரைக்காற்று மேற்கு வட மேற்கு திசையிலிருந்து வீச வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும். வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

 நாளையும், நாளை மறுநாளும்  தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . தென்மேற்கு பருவ மழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் தொடங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News