இந்தியாவிற்கே மாடல் ஆட்சியாக திராவிட ஆட்சி : தி.க. தலைவர் கீ வீரமணி

இந்தியாவிற்கே முன்மாதிரி ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது என்று தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

Update: 2021-12-02 13:54 GMT

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வாழ்த்தினார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89ஆவது பிறந்தநாளையொட்டி, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. Carry the torch forward என்ற நூலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். Worthy living why & how? என்ற நூலை சுப வீரபாண்டியன் வெளியிட்டார். வாழ்வியல் சிந்தனைகள் என்ற நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் கி.வீரமணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கி.வீரமணி கூறுகையில்,

இந்தியாவில் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு திமுக ஆட்சி கிடைத்து உள்ளது என்றும், சிலர் வெற்றிடம் இருக்கிறது என்று கூறினார்கள், உட்புகலாம் என்று நினைத்தார்கள், நடிகர்களை தேடினார்கள். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளதால் ஒவ்வொரு நாளும் தலை நிமிர்ந்து நாம் இருந்து கொண்டிருக்கிறோம் என்றார்.

தமிழகத்திற்கு விடியல் திமுக ஆட்சி, இந்தியாவிற்கு விடியல் வர வேண்டும் என்றால் அது தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்றும், இந்தியாவிற்கே மாடல் ஆட்சியாக திராவிட ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், நம் பிள்ளைகள் படிக்க வேண்டாமா? இன்னமும் நம் பிள்ளைகளை நீட் தேர்வுக்கு பலி கொடுக்க முடியுமா? சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பினால், அவர் அதனை ஊர்காய் ஜாடியில் வைத்துள்ளார். சட்டத்தை திருப்பி அனுப்பலாம், திருத்தம் அனுப்பலாம், எதற்கும் பதில் கூறாமல் இருப்பது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயல் என்று சாடிய அவர்,

தமிழகத்திற்கு புதிதாக வந்த ஒரு கட்சியின் தலைவர், ஒரு புள்ளி கூட மாற்ற முடியாது என்று கூறினார். ஆனால் அந்த சட்டமே தற்போது நீக்கப்பட்டுள்ளது. எனவே எதுவும் நிரந்தரம் என்று இருந்து விட கூடாது என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News