தாம்பரத்தில் கலெக்டரின் காரை தி.மு.க.வினர் முற்றுகை

வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த மாவட்ட கலெக்டரின் காரை தி.மு.க.வினர் தாம்பரத்தில் முற்றுகை செய்தனர்.

Update: 2021-10-13 08:11 GMT

வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த மாவட்ட கலெக்டரின் காரை தி.மு.க.வினர் தாம்பரத்தில் முற்றுகை செய்தனர். அருகே அ.தி.மு.க. வினர் கூட்டமாக எதிர்ப்பு தெரிவித்ததனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளரின் முகவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தனியார் பள்ளி அருகே அமைந்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சின்னையா வீட்டின் முன்பு மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், கே.பி.கந்தன் முன்னாள் அமைச்சர் சின்னையா, பா.ஜ.க. மாவட்ட பார்வையாளர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் அ.தி.மு.க. நிர்வாகிகள் பெரும்பாக்கம் ராஜசேகர், கோவிலம்பாக்கம் மணிமாறன் உட்பட 450-க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினர் திரண்டிருந்தனர்.

கலெக்டர் கார் முற்றுகை செய்தனர்;

தி.மு.க.வினரும் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் செல்ல தொடங்கினர். அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அதற்கு தி.மு.க.வினர் எங்களையும் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் அனுமதியுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், தி.மு.க.வினர் அனைவரையும் அப்புறப்படுத்தி மாவட்ட கலெக்டரின் காரை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுப்பி வைத்தனர். பின்னர் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். இதனால் அந்த இடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News