சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Update: 2021-04-27 05:10 GMT

சென்னை விமான நிலையம் (மாதிரி படம்)

சென்னை விமானநிலைய உள்நாட்டு விமான பயணிகளுக்கு  புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் உள்ளிட்ட 6 வெளிமாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் இதுவரை வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு மட்டுமே கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருந்தது.சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை.ஆனால் புதிய விதிமுறையின்படி, சென்னை உள்நாட்டு விமானப்பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணி விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையம்(ICMR) அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் உள்ள பயணிகள் மட்டுமே இந்த 6 உள்நாட்டு விமானங்களில் பயணிக்க முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

சென்னையிலிருந்து குறிப்பாக அந்தமான், புவனேஸ்வா்(ஒடிசா), ஜெய்ப்பூா்(ராஜஸ்தான்), இம்பால்(மணிப்பூா்), பேக்டோக்ரா(மேற்குவங்கம்), ராஜ்கோட்(குஜராஜ்) ஆகிய 6 உள்நாட்டு விமானங்களில் செல்பவா்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்தால் தான்,விமானநிலைய கவுண்டா்களில் பயணிக்கு போா்டிங் பாஸ் கொடுக்கப்படும்.

சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகள் பயணம் ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவாா்கள்.அந்த பயணிகள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து,நெகட்டிவ் சான்றிதழுடன் வந்து மீண்டும் விமான பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி விமானங்களில் இந்த நகரங்களுக்கு பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

Tags:    

Similar News