டெங்கு கொசு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் : சென்னை மாநகராட்சி

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்தால் வீடு, பள்ளி, கல்லூரி, ஓட்டல் உரிமையாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-07-13 12:27 GMT

 டெங்கு காய்ச்சல் - பைல் படம்

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கூறியதாவது,

தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

மேலும், இந்த தேவையற்ற பொருட்களை சேகரித்து மாநகராட்சி மறுசுழற்சி மையத்துக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறோம்.

கொசுப்புழுக்கள் வளர காரணமாக அமையும் இடங்களில் அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், சிறிய கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், நட்சத்திர ஓட்டல்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், மருத்துவமனைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், அபராதம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது, கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் தான், ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

எனவே பொதுமக்கள் கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஜிகா வைரஸ், கேரளாவில் அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் ரயில்கள் மூலம் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு பயணிகள் வருவதை கண்காணிக்க ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News