மாணவர் தற்கொலையில் அதிமுக அரசியல் செய்வது அநாகரீகம்: கனிமொழி

நீட் தேர்வு விவகாரத்தில், மாணவர் தற்கொலை செய்த விவகாரத்தை அதிமுக அரசியலாக்குவது அநாகரீகம் என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-09-13 07:30 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், அண்ணா நகரில் உள்ள சத்யா நகரில்,   திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், 4பேருக்கு தையல் இயந்திரம், 3 பேருக்கு மாற்றுதிறனாளிகள் வாகனம், 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.  அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:

நீட் விவகாரத்தில், அரை மனதோடு கண் துடைப்பிற்காக முயற்சி எடுப்பதற்கும், முழு மனதோடு முயற்சி எடுப்பதற்கு வித்தியாசம் உண்டு. கண் துடைப்பிற்காக செய்தது அதிமுக ஆட்சி. மாணவர் உயிரிழப்பை பயன்படுத்தி,  அதிமுக அரசியல் செய்வது அநாகரீகம்.

நீட் தேர்வு தான், நல்ல மருத்துவர்களாக மாற்ற வேண்டும் என்று இல்லை. தமிழகத்தில் படித்து முடித்து பல்வேறு மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். நீட் தேர்வு விவகாரத்தில் நிச்சயம் நமது போராட்டம் வெற்றி பெரும். புதிய கல்விக் கொள்கையை ஏற்பதில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்று கனிமொழி கூறினார்.

Tags:    

Similar News