கோவிட் வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம் -சென்னை மாநகராட்சி அதிரடி

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 மண்டபங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள், முகக்கவசம் அணியாத நபர்கள் என மொத்தம் 10,520 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-23 01:49 GMT

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமணம் மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் படி, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளின் கீழ் அமலில் உள்ளது. இதில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்து கொள்ளலாம் என்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்ட இணையதளத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய மண்டப உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இதுவரை 340 மண்டப உரிமையாளரிடமிருந்து சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த பதிவுகளின் அடிப்படையில் மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 மண்டபங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள், முகக்கவசம் அணியாத நபர்கள் என மொத்தம் 10,520 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். மண்டப உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என முதன்மைச் செயலர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் திரு. ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News