சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆணையர் தகவல்!

சென்னை மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

Update: 2021-06-10 15:06 GMT

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், 45வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ள நபர்களுக்கும், அதனை தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விலையில்லா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இத்துடன் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணியாளர்கள என முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனை அடுத்து 18 வயதுக்கும் மேற்பட்ட நபர்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 லட்சத்து 59 ஆயிரத்து 783 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 86 ஆயிரத்து 897 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 9ந் தேதி வரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேருக்கு விலையில்லா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டேவர்களில் தடுப்பூசி செலுத்திய சதவீதம் 66.31 ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News