அம்பத்தூரில் போதை மாத்திரைகள் பறிமுதல்; சிறுவன் உட்பட 6 பேரை கைது

அம்பத்தூரில் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார் சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

Update: 2024-05-30 12:15 GMT

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் 

சென்னை அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியில் வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக விற்பனை செய்யப்பட்டுவருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை நோட்டமிட்ட போலீசார் அவர்களிடம் சென்று பேச்சு கொடுத்த போது அவர்கள் பெண்கள் கர்ப்பிணி காலத்தில் குழந்தை பிறப்பதற்கு முன்பு ஏற்படக்கூடிய வலிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அம்பத்தூர் ஐசிஎப் காலனியை சேர்ந்த அஜித் (21), திருமுல்லைவாயில் பகுதியில் சேர்ந்த சதீஷ் (18), அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன், அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த லிங்கேஷ் (18), அம்பத்தூர் இந்திரா நகர் பகுதியில் சேர்ந்த தனுஷ் (21), அம்பத்தூர் சோழபுரத்தை சேர்ந்த யோகராஜ் (21) என்பதும், அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், வட மாநில வாலிபர்களுக்கு  போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 1800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து பின்னர் போலீசார் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News