பல்லாவரம்: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி
பல்லாவரம் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.;
பழைய பல்லாவரம் பகுதியில் பெய்த கன மழையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகர் பகுதியில், கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக மழைநீரானது வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளிலேயே சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கால்வாய் நீர், சாலை முழுவதும் நிரம்பி வருவதால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக, இதே பிரச்சனை இந்த பகுதியில் இருப்பதாகவும், இது குறித்து பல முறை எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டிகின்றனர். எனவே உடனடியாக பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.