12 ஆண்டுகளாக மக்கள் அவதி: பாலாறு தரைப்பாலத்தை சீரமைப்பர்களா? -வேதனையுடன் 15 கிராம மக்கள்..!

செங்கல்பட்டு: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாலாறு தரைப்பாலத்தை சீரமைக்க 15 கிராம மக்கள் கோரிக்கை.

Update: 2021-06-23 08:43 GMT

பழுதடைந்து உடைந்த நிலையில் பாலாறு தரைப்பாலம்.  

கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள உதயம்பாக்கம்-படாளம் இடையே உள்ள பாலாற்றின் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என 15 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு, உதயம்பாக்கம், படாளம், பொன்விளைந்த களத்தூர், புலிப்பாரக்கோயில், புதூர், உள்ளிட்ட 15 கிராம ஊராட்சிகளிலும் சுமார் 3,லட்சம் பேர் வசித்து வருகின்றனர். உதயம்பாக்கம்- படாளம் ஆகிய இரு ஊராட்சிகளையும் இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. படாளம், புலிப்பாரக்கோயில் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தினமும் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு செங்கல்பட்டு செல்லும் மக்கள் பாலாறு தரைபாலத்தை கடந்து உதயம்பாக்கம் வழியாக சென்று வந்தூள்ளனர். ஆனால் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பாலாற்றில் மணல் திருடர்கள் பாலத்தின் கரையோரம் உள்ள மணலை திருடிச்சென்றதன் காரணமாக பாலம் முற்றிலுமாக இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 15 கிராம மக்கள் அருகில் உள்ள செங்கல்பட்டுக்கு செல்லவேண்டும் என்றால் கூட சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றனர். இதனால் கிராம மக்கள் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்ததாகவும், ஆனால் இது நாள்வரையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் வேதனையுடன் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News