சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2022-05-28 15:40 GMT

செல்வகுமார்.

ஜெயங்கொண்டம் அருகே திருமணம் செய்து கொள்வதாக 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடங்கன்னி கிராமம் கீழத் தெருவை சேர்ந்த துரைவேம்பு மகன் செல்வகுமார் வயது (21). இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்து சென்றார். இதுகுறித்து அவரது உறவினர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். விசாரணையில் திருப்பூரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவர்களை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, சிறுமியிடம் செல்வகுமார் ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து செல்வக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News