உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் போக்சோவில் கைது
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைதானார்.;
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணன். இவர் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக கூறியும், தன்னை காதலிக்க வேண்டி வற்புறுத்தியுள்ளார். மேலும் அந்த மாணவிக்கு பரிசுப் பொருட்கள் வைத்திருப்பதாக கவரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது சிறுமியை தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார்.
சிறுமி வர மறுத்து எதிர்ப்பு தெரிவித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் அவரை விடாமல் துரத்திச் சென்று அவரது வீட்டிற்கே சென்று சிறுமியை பாலியல் சீண்டல் செய்ய முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வெங்கட்ரமணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.