ஆண்டிமடம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்

Update: 2021-08-28 05:24 GMT

ஆண்டிமடம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்


ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சாலை வசதி மேம்பாடு, குடிநீர் வசதி ஏற்படுத்துதல், தெருவிளக்கு அமைத்தல், தனி நபர் இல்லக்கழிவறை அமைத்தல், அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கோவில் வாழ்க்கை ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கோவில் வாழ்க்கை முதல் தாண்டவராயன் குப்பம் வரையிலான 2.600 கி.மீ நீளமுள்ள தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், சரியான அளவில் மற்றும் தரத்தில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், சாலையின் இருபுறங்களிலும் கிராவல் கொண்டு மேடு, பள்ளங்களை நிரப்பி, மக்கள் எளிதாக சென்று வரும் வகையில் அமைத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகட்டும் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, உரிய காலத்திற்குள் கட்டுமானப்பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கோவில் வாழ்க்கை ஊராட்சியில் ரூ.4.13 இலட்சம் மதிப்பீட்டில் குரவன் குட்டையில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகளையும், சாமியார் ஏரிக்கு செல்லும் 3 வரத்து வாய்க்கால்களை பார்வையிட்டு, மழைக்காலங்களில் மழைநீர் முழுவதுமாக ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால்களை சீரமைக்கவும், தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பெரியகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ரூ.6.85 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்ட கலெக்டர், மழைக்காலங்களில் அதிக அளவிலான மழைநீர்; தடுப்பணையில் தேங்கி நிற்கும் வகையில் தடுப்பணையினை உறுதியாகவும், வாய்க்காலினை ஆழப்படுத்தவும் அறிவுறுத்தினார். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் ராஜராஜன், வட்டாட்சியர் திரு.முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News