காவல் நிலைய வழக்குகளின் அடிப்படை சந்தேகங்கள்..! சட்டம் அறிவோம் வாங்க..!

போலீஸ் அதிகாரி எந்த இடத்தில் வைத்தும் உங்களிடம் கேள்வி கேட்க முடியுமா என்பதை இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.

Update: 2024-05-29 05:40 GMT

சட்டமறிவோம் (கோப்பு படம்)

நீங்கள் தனியாக நடந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எதுவும் தெரியாது. ஒரு போலீஸ் அதிகாரி உங்களை அடையாளம் காண வேண்டும் என உங்களை தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார். அதாவது நீங்கள் குற்றத்தைச் செய்ததாக அவர் கருதுகிறார். அப்படி விசாரிக்கலாமா?

ஆம். விசாரிக்க முடியும். அதற்கு சட்டத்தில் இடமுள்ளது. அப்படி விசாரணை செய்யும் போது நீங்கள் சரியான தகவலை கொடுக்கவில்லை என்றால் உங்களை கைது செய்யும் அதிகாரமும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டு. இந்த அதிகாரத்தை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 42 வழங்குகிறது.

English : Section 42 in The Code Of Criminal Procedure, 1973 (Arrest on refusal to give name and residence)

ஒரு போலீஸ் அதிகாரி உங்களை சதேகப்பட்டு விசாரணை செய்தல் அத்தகைய அதிகாரியின் விசாரணையில் நீங்கள் உங்கள் பெயரையும் வசிப்பிடத்தையும் கொடுக்க மறுக்கும் போது அல்லது அத்தகைய அதிகாரிக்கு பொய்யான தகவலை கொடுத்தால் அதனை அவர் பொய் என கருதினால் உங்கள் பெயர் அல்லது வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அந்த அதிகாரி உங்களை கைது செய்யலாம்.

போலீஸ் அதிகாரியின் விசாரணைக்கு பின் நீங்கள் சொல்லியது உண்மை என அறிந்தால் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.

Counter case என்றால் என்ன?

ஒரே ஒரு சம்பவத்தில் எதிரிக்கும், புகார்தாரருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்து, அந்த சம்பவம் குறித்து இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் அந்த புகார்களையும் பதிவு செய்து காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

புகாரில் கூறப்பட்டுள்ள சங்கதிகள் உண்மையானவை என்று தெரியவந்தால் இரண்டு வழக்குகளிலும் இறுதியறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

புகார் பொய்யானது என்று தெரிய வந்தால் அந்த புகாரின் மீதான விசாரணையை காவல்துறையினர் கைவிட்டு விட வேண்டும். இது சம்மந்தமாக வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பு கீழே உள்ளது. ஒரே குற்றச் சம்பவம் தொடர்பாக எதிர்- எதிர் தரப்பினர் மீது 2 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. (2001 Air SCW 2571)

விபத்தில் காயமடைதவருக்கு சிகிச்சை அளிக்க காவல்துறையிடமிருந்து முதல் தகவலறிக்கை தேவையா?

நாம் அனைவரும் தினமும் நாம் வாழும் சூழலில் பல பயணங்கள் செல்கிறோம் பணிகள் பல செல்கிறோம் அதில் அருகில் யாருக்காவது விபத்து நடந்து விட்டது என்றால் சிலர் தயங்குவதுண்டு. காரணம் வீண் அலைச்சல் போலிசில் புகார் அளிக்க வேண்டும். காவல்நிலையத்திற்கு அலைய வேண்டும் என்ற அச்சமே காரணம். இது தேவையில்லை.

விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. எனவே, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மருத்துவமனை காவல்துறை அனுமதி வேண்டும் என்று சொன்னால் அது சட்டப்படி குற்றம் என்று சொல்லுங்கள். ஆபத்தில் ஒரு உயிருக்கு தேவை உதவி. அதனை உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவருக்கு செய்யுங்கள்.

FIR என்றால் என்ன?

முதல் தகவல் அறிக்கை என்பது குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசாரால் பதியப்படும் வழக்கு ஆவணம் ஆகும். காவல் நிலைய வழக்குகளில் புகார் கொடுக்கப்படும் போது அவற்றை விசாரணை செய்து இந்திய தண்டனைச் சட்டம் மேலும் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் கொடுமைகள் சிறுவர் சிறுமி வன் கொடுமைகள் போன்ற சட்டங்களின் அடிப்படையில் குற்றங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த பிரிவுகளின் அடிப்படையில் குற்றவியல் வழக்கில் வழக்கு FIR பதிவு செய்யப்படும்.

முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது குற்றத்தினை பதிவு செய்ய காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நடைமுறை ஆகும். குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்ற வழக்குகளின் புலனாய்வின் முதல் கட்டமாகும்.

இந்த நடைமுறை எந்த சட்டத்தின் அடிப்படையில் பதியப்படுகிறது என்றால் குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 வது சட்டப்படி தான் பதியப்படுகிறது.

புகாரைப் பெற்ற காவல் அதிகாரி அச்சிடப்பட உரிய படிவத்தில் புகாரையும். புகாரில் கண்ட பொருன்மைக்கு ஏற்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து அந்த புகாரினை காவல் உயர் அதிகாரிகளுக்கும் நீதித்துறை நடுவர் ஒருவருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படவேண்டும்.

புகாரைப் பெற்ற காவல் அதிகாரியை அந்த புகாரை பற்றி விசாரணை செய்து குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி ஆவார். அந்த அதிகாரியை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் கடமையுடையவர் ஆவார்.

உயர்நீதிமன்றம் அல்லது இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆணையில்லாமல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள பதிவுகளை காவல் துறையால் மாற்றவே முடியாது. இந்திய சட்டத்தில் அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு வகைகளாக அடக்கி விடலாம்.

அதாவது புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள் என உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டியது போலீசாரின் கடமையாகும்.

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை ஆகும்.இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகு தான், F.I.R பதிவு செய்ய முடியும்.

குற்றம் நடந்த பிறகு எங்கே புகார் கொடுப்பது?

சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால் அவசரக்கலாம் என்றால் அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.

பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர் முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள் குறையாத நபராக இருக்க வேண்டும். அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி. என எவரிடமும் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையொப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதன் பிறகு குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும். பிறகு தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம் அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம் ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.

ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர் நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும்.

புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம் அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம் வழக்கு பதியப்படும் போது FIR ஐ கவனமுடன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கையில்லை என்ன செய்ய ஒரு குற்றம் நடந்தும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் அந்த புகாருக்கு சரியான நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி மனு செய்யலாம்.

புகாரை ஏற்கவில்லை என்றால் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் புகார் கொடுக்கலாம். (Complaint to Judicial Magistrate)

மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றால், குற்றவியல் நடைமுறையின் பிரிவு 190ன் படி, மற்றும் 156(3)ன்படி Judicial Magistrate ஜூடிசியல் மாஜிஸ்திரேட்/ மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டுக்கு புகார் அளிக்க தகவலறிந்தவருக்கு சட்டப்பூர்வமாக உரிமை உண்டு.

ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவுக்கு பின் குற்ற முகம்தாரம் அந்த வழக்கில் இருந்தால் காவல்துறையால் FIR பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்க வேண்டும்.

 காவல்நிலையத்தில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை இல்லை குற்றவாளி மீது FIR போடல என்ன செய்யலாம்?

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல் நிலைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றால் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும், எப்.ஐ.ஆர் பதிவு செய்ததற்கான காரணத்தை காண்பிக்க வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட சொல்லி உயர் நீதிமன்றத்தில் தவறிழைக்கும் காவல்துறை அதிகாரிக்கு எதிராக ரிட் ஆஃப் மாண்டமஸ் என்ற ரிட் மனுவை தாக்கல் செய்து நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கலாம். மேலும் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்த அதிகாரிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்யலாம்.

சமீபத்தில் லலிதா குமாரி என்பவரது வழக்கில் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருந்ததற்கு காவல்த்துறைக்கு எதிராக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறை அதிகாரியின் அதிகார வரம்பில் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர் மேற்கொள்ள வேண்டிய மாற்று பரிகார வழி என்ன?

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் மற்றும் எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருக்கும் காவல்துறையின் செயலற்ற தன்மையால் நீங்கள் விரக்தி, உயிருக்கு ஆபத்து மற்றும் சுதந்திரம் பறிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால் அதற்காக உயர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு இழப்பீடு கோரி இந்திய அரசியலமைப்பின் 21ன்படி ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

பிரிவு 166A(c)ன் கீழ், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் தனக்கு அளிக்கப்பட்ட எந்த தகவலையும் பதிவு செய்யத் தவறினால், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 154 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ், சட்டப்பிரிவு 326A, பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் தொடர்பாக 326B, பிரிவு 354, பிரிவு 354B, பிரிவு 370, பிரிவு 370A, பிரிவு 376, பிரிவு 376A, பிரிவு 376B, பிரிவு 376C, பிரிவு 376D, பிரிவு 376E அல்லது இந்திய தண்டனைச் சட்டம் 376E அல்லது பிரிவு 509, கடுமையான சிறைத்தண்டனைக்கு அவர் தண்டனைக்குரியவர். அவருக்கு தண்டனை ஆறு மாதங்களுக்கு குறைவாக இருக்கக்கூடாது, ஆனால் அது இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.

எனவே அடுத்த முறை எந்தவொரு காவல்துறை அதிகாரியும் நியாயமற்ற காரணங்களுக்காக உங்கள் எஃப் ஐ ஆரை (FIR) பதிவு செய்ய மறுத்தால் மாற்று வழிகளைப் பயன்படுத்த தயங்க வேண்டாம்.

நன்றி: சட்ட ஆலோசகர் சா. உமா சங்கர்., M.Com., M.B.A.,M.Phil.,LLM தொடர்பு எண்: 8778710779

Tags:    

Similar News