இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்

Update: 2021-06-14 02:33 GMT

ஒரு முறை செய்வோம்…. நான்கு உயிர்களை காப்போம்…!!

ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 -ம் தேதி உலக ரத்த தான தினம் (World Blood Donor Day) கொண்டாடப்படுகிறது

ரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது. எதிர்பாராத விபத்து மகப்பேறு ஆபரேஷன் நோய் போன்ற ஆபத்தான சூழல்களில் பாதிக்கப் பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இன்னொருவர் தானம் செய்வதன் மூலம் மட்டுமே ரத்தம் பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.

யார் வழங்கலாம்:

நல்ல உடல்நிலையில் உள்ள 18-65 வயதுக்குள் உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். உடலின் எடை குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும். ரத்ததானம் கொடுக்கும் முன் ரத்த அழுத்தம் நாடித்துடிப்பு ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின் ரத்த தானம் செய்ய வேண்டும். 350 மில்லி மட்டுமே தானத்துக்கு எடுக்கப்படுகிறது.

ஏன் தயக்கம்:

பயம் மற்றும் நோய் உருவாகும் என்ற தவறான எண்ணமே மக்கள் ரத்த தானம் செய்ய தயங்குவதற்கு காரணம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த தானம் செய்வதன் மூலம் எச்.ஐ.வி. உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என தவறாக நினைப்பதால் தானம் செய்ய தயங்குகின்றனர். தானம் செய்த ரத்தம் இரண்டே மாதங்களில் 100 சதவீதம் மீண்டும் உற்பத்தியாகி விடும். ரத்த தானம் செய்வது பல வழிகளிலும் உடலுக்கு நன்மை அளிக்கும்.

உலகில் ஆண்டுக்கு 11.74 கோடி பேர் மட்டும் ரத்த தானம் செய்கின்றனர். இதில் 42 சதவீதம் பேர் அதிக வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள். * ரத்த தானம் செய்யும் ஆயிரம் பேரில் 32.6 பேர் அதிக வருமானமுடைய நாடுகளையும் 15.1 பேர் நடுத்தர வருமானம் உடைய நாடுகளையும் 4.4 பேர் ஏழை நாடுகளையும் சேர்ந்தவர்கள்.

விரும்பி இலவசமாக வழங்குதல் உறவினர்களுக்காக வழங்குதல் பணத்துக்காக வழங்குதல் என மூன்று வழிகளில் ரத்த தானம் வழங்கப்படுகிறது.

உலகில் ரத்த தானம் செய்பவர்களில் 32 சதவீதம் பேர் பெண்கள்.

உலகின் 170 நாடுகளில் 12000 ரத்த மையங்கள் மூலம் 10 கோடி பேர் ரத்த தானம் செய்துள்ளனர்.

Similar News