காலையில் டீயில் பிஸ்கட் நனைத்து சாப்பிடுவீங்களா நீங்க...?

காலையில், தேநீரில் பிஸ்கட், பன், வர்க்கி போன்றவற்றை நனைத்து சாப்பிடும் பழக்கம், நம்மில் பல பேரிடம் உள்ளது. அது சரிதானா என்பதை தெரிந்து கொள்வோம்.

Update: 2023-03-13 00:58 GMT

டீயில் பிஸ்கட் நனைத்து சாப்பிடும் பழக்கம் இருக்கா உங்களிடம்? (கோப்பு படம்)

காலை வேளையில் சிலர் தேநீரில் பிஸ்கட்டை நனைத்து ருசித்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அப்படி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என, உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

காலையில் எழுந்தவுடன், படுக்கையில் அமர்ந்தபடியே ‘பெட் காபி’ அருந்துவது, பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. காபி அருந்தாமல், படுக்கையை விட்டு எழுந்திருப்பதில்லை என்பதே, அவர்களது கொள்கையாக இருக்கக் கூடும். ஆனால், வெறும் வயிற்றில் காலையில் டீ, காபி சாப்பிடாமல், குடிநீர் குடிக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. பால் கலந்த காபி அல்லது டீ, வயிற்றில் வாயுவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


இன்னும் பலர், தங்களது குழந்தைகளுக்கு, காலை உணவு போல டீயில் பன், வர்க்கி, பிஸ்கட் போன்றவற்றை நனைத்து சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கி தருகின்றனர். வளரத் துவங்கும்போதே, இந்த உணவு பழக்கத்தை பழகி விடும் பிள்ளைகள், வளர்ந்த பின்பும், இந்த பழக்கத்தை கைவிடுவதாக இல்லை. பல இடங்களில், பெரியவர்களாக உள்ள பலரும், டீயில் பிஸ்கட் நனைத்து சாப்பிடும் பழக்கத்தை, நாம் நேரடியாகவே காணக்கூடும்.


தேநீர்-பிஸ்கட்டுடன் அன்றைய நாளை தொடங்குவது ‘அசிடிட்டி’ பிரச்சினையை உண்டாக்கும். தொப்பையை சுற்றி கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். உடல் ஊட்டச்சத்தை உறிஞ்சுவதை தடுக்கும். ஒருசிலருக்கு வயிற்று பிரச்னைகள் இருக்கலாம். பிஸ்கட் மற்றும் தேநீரில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்திவிடும். பிஸ்கட்டில் கலந்திருக்கும் கோதுமை மாவு அல்லது மைதா மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளால் செரிமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று, உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேநீர்-பிஸ்கட் சாப்பிடுவதற்கு மாற்றாக, சில பானங்களை பருகலாம். வயிறு உப்புசம் தொடர்பான பிரச்னை கொண்டிருப்பவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து வடிகட்டி பருகலாம். இது செரிமான நொதிகளின் செயல்பாட்டை தூண்டி செரிமானத்தை மேம்படுத்தும்.

வீக்கம் மற்றும் வாய்வு தொந்தரவை தடுக்கும். மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீரில் 15 மில்லி கற்றாழை சாறு கலந்து பருகலாம். இது குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இயற்கையான மலமிளக்கியாக செயல்படும்.

இளநீரில் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை சேர்த்தும் பருகலாம். இது பசி உணர்வை கட்டுப்படுத்திவிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.


பெருஞ்சீரக தண்ணீரும் செரிமானத்தை மேம்படுத்தும். செரிமான பிரச்சினைகளை போக்க உதவும். குடல் வீக்கத்தையும் குறைக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் தூள் சேர்த்து பருக வேண்டும்.

இவ்வாறு சில வழிமுறைகளை கையாண்டால், வயிற்றில் தேவையற்ற அஜீரணக்கோளாறு பிரச்னைகள் ஏற்படாது. எனவே, காலையில் பெட் காபி என்பதை தவிர்ப்பதோடு, டீயில் பிஸ்கட் நனைத்து சாப்பிடும் பழக்கத்துக்கும் ‘குட்பை’  சொல்லி விடுங்கள்.

Similar News