ஏழ்மையில் தவித்த நடிகர் குமரிமுத்துவுக்கு கைகொடுத்த விவேக்..!

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து வறுமையுற்று இருந்த காலத்தில் விவேக் செய்த பேருதவி மறக்கமுடியாதது என்று குமரிமுத்து சிலாகித்த கண்ணீர் கதை.

Update: 2023-09-15 04:41 GMT

நடிகர்கள் விவேக் மற்றும் குமாரி முத்து (கோப்பு படம்)

Actor vivek helped kumari muthu for his daughter's marriage, Actor Vivek, chinna kalaivanar, Cinema News, Tamil Cinema News

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து சிறிய துணைப் பாத்திரங்களில் வந்த நகைச்சுவை நடிகர். குமரிமுத்து என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அவரது ஒன்றரைக் கண்ணும், இடிச்சிரிப்பும்தான்.

பிறரை சிரிக்க வைப்பவர்களின் வாழக்கையில் அவர்கள் சிரிக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆமாம், அவருக்கு வறுமையையும், சோகமும் வாழ்வாக வழங்கப்பட்டிருந்ததுபோலும். மகளின் நிச்சயித்த திருமணத்துக்குப் பணமில்லாமல் ஏழ்மையில் தவித்த நடிகர் குமரிமுத்து யாரிடம் பண உதவி கேட்பது என்று தெரியாமல் சிக்கலில் தவித்தார்.

நடிகர் குமரிமுத்துவின் கடைசி மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. ஒரு ஐம்பதாயிரம் பணம் இருந்தால் ஓரளவு திருமணச் செலவைச் சமாளிக்கலாம் என்ற நிலை. ஆனால், அவர் கையிலோ பணமில்லை.

இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்குச் சென்றுவந்த பழக்கத்தில் உருவான நண்பரிடம் தயங்கித் தயங்கி, பண உதவி கேட்டார். நண்பரோ, ' சரிண்ணே பண்ணிடலாம். நம்ம விவேக் நாடகம் ஒன்றை இலங்கையில் அரங்கேற்றுவோம். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு ஐம்பதாயிரம் தந்துவிடுகிறேன். அதற்கு விவேக்கிடம் பேசி நீங்கள்தான் சம்மதிக்க வைக்கவேண்டும்.விவேக்கிற்கு ரூ.2லட்சம் சம்பளம் தந்திடலாம்." என்றார் இலங்கை நண்பர்.

அந்த காலகட்டத்தில் விவேக் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை நடிகராக இருந்தார். விவேக் அந்த காலகட்டத்தில் படு-பிசியாக இருந்த நேரம். விவேக்கின் சினிமா கால்ஷீட் கிடைக்காமல், பல திரைப்படங்கள் காத்திருப்பில் இருந்த நேரத்தில், நாடகம் ஒன்றிற்காக விவேக்கின் கால்ஷீட்டை எப்படிக் கேட்பது என்று குமரிமுத்து மேலும் தவித்தார். இருந்தாலும் மகளின் திருமணம் நடக்கவேண்டும். அதனால் விவேக்கிடம் சென்று தயங்கியபடியே,

"தம்பி விவேக், எனது மகள் திருமணத்துக்கு ஐம்பதாயிரம் பணம் தேவைப்படுது. நீங்கள் ஒரு நாடகத்தை இலங்கையில் நடித்துக் கொடுத்தால், எனக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பணம் கிடைக்கும். உங்களுக்கும் ரூ.2 லட்சம் சம்பளம் தருவதாக கூறி இருக்கிறார்கள்." என்று குமரிமுத்து கேட்க,

கொஞ்சமும் தயங்காமல் "அதனால என்னண்ணே? அதைவிட வேறுவேலை என்ன இருக்கு?" என்று உடனேயே ஒப்புக் கொண்டார் விவேக்.


நாடகமும் முடிந்தது; குமரிமுத்தும், விவேக்கும் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு வந்த விழாக் குழுவினர், குமரிமுத்துவிடம் ஐம்பதாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, விவேக்கிடம் ரூபாய் இரண்டு இலட்சம் பணத்தைப் பேசியபடி கொடுத்தார்கள்.

விழாக் குழுவினர் போனதும், குமரிமுத்துவிடம் வந்த விவேக்,, "அண்ணே, பிடிங்க இந்த இரண்டு இலட்ச ரூபாயை. உங்க மகளோட கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்துங்கள் " என்று தனக்குக் கிடைத்த இரண்டு இலட்சம் பணத்தை முனை முறியாமல் அப்படியே குமரிமுத்துவின் மகள் திருமணத்துக்குக் கொடையளித்தார் கலியுகக் கர்ணன் போலிருந்த விவேக்.

குமரிமுத்து கண்களில் கண்ணீர் பெருகி இருந்தது. ஆனால் விவேக்கோ அவரை கட்டியணைத்து, 'நம்மள மாதிரி கலைஞர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்குண்ணே செய்யப்போறேன்." என்றார் பெருந்தன்மையோடு.

"கலைவாணருக்குப் பிறகு, சிறந்த மனிதரும், நடிகரும் விவேக் அவர்கள் மட்டும்தான்" என்று ஆனந்தக் கண்ணீருடன் அழுதுகொண்டே கூறினார் நடிகர் குமரிமுத்து, விவேக் மறைந்த தருணத்தில்.

Tags:    

Similar News