அனல் மின் நிலைய பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடக்கம்

வல்லூர் அனல் மின் நிலையம் (கோப்பு படம்).
வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் 710மெ.வா மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த. அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1வது நிலையின் 3வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் 210மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இதே போல 3அலகுகளில் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் 500மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. ஒரே நேரத்தில் வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 710மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு இருப்பதால் மின் நுகரவோரின் தேவைக்கு ஏற்ப பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu