மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது
மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தபால் பெட்டி கண்ணன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 45 ) அவரது மனைவி ஜான்சி இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . ஜான்சியின் தாயார் கணவரை இழந்த வசந்தி (வயது 65) இவர்களுடன் தங்கி ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
புஷ்பராஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த புஷ்பராஜ் மனைவியிடம் சண்டையிட்டு அவரை அடித்ததால் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார் .
பிள்ளைகளை கவனித்துக் கொண்ட மாமியார் வசந்தியை போதையில் இருந்த புஷ்பராஜ் வீண் தகராறில் ஈடுபட்டு சண்டையிட்டார் .
ஆத்திரத்தில் இருந்த புஷ்பராஜ் திடீரென தனது மாமியாரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் கீழே விழுந்த வசந்திக்கு பின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில், மயக்கமாகி கீழே விழுந்தார். சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகள் ஜான்சி தனது தாயாரின் தலையில் அடிபட்டு ரத்தம் வடிந்து மயக்கமாகி இருந்த நிலையை கண்டு அலறி துடித்தார்.
பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்த மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த புஷ்பராஜை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.