தவறான சிகிச்சை அளித்த மருத்துவருடன் நோயாளிகளின் உறவினர்கள் வாக்குவாதம்

தவறான சிகிச்சை அளித்த மருத்துவருடன் நோயாளிகளின் உறவினர்கள் வாக்குவாதம்
X

மருத்துவருடன் நோயாளிகளின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவரிடம் நோயாளியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு தற்பொழுது அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது

சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு ஆண்களுக்கு தனி வார்டு பெண்களுக்கு தனி வார்டு என அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் தற்பொழுது இயங்கி வரும் நிலையில் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் என்று இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது

இந்த நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர் ஒரு நோயாளிக்கு இ சி ஜி எடுத்துவிட்டு அந்த இசிஜியை வைத்து மற்றொரு நோயாளிக்கு சிகிச்சை பார்த்ததாக கூறப்படுகிறது

இதனைக் கண்ட மற்ற நோயாளிகளும் நோயாளிகளுடன் வந்தவர்களும் கேட்டபோது மருத்துவர் அனைவரையும் தரக்குறைவாக ஒருமையில் பேசி அனைவரும் வெளியே செல்லும்படி அதிரடி அலப்பறையில் ஈடுபட்டதாகவும் நோயாளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் சந்தேகம் அடைந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் பார்த்தபோது அந்த டாக்டர் குடித்துவிட்டு தன்னிலை மறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள நோயாளிகள் உங்களை நம்பி தானே வந்தோம் இப்படி குடித்துவிட்டு சிகிச்சை பார்க்கிறீர்களே உயிருக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்று மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையில் இரவு காவல் பணியில் இருந்த காவலர்கள் மருத்துவரை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.இது சம்பந்தப்பட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி திருவள்ளூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் பொது மருத்துவர் நல்லதம்பி ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த நிலையில் அவரது மனைவி மேற்படிப்பிற்காக திருப்பதி சென்றதால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொது மருத்துவர் நல்லதம்பி மாறுதல் பெற்று வந்து சுமார் 40 நாட்களே பணிபுரிந்த நிலையில் தற்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

எனவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகமும் உடனடியாக விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
future ai robot technology