பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் 100 கன அடி உபரி நீர் திறப்பு

பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் 100 கன அடி உபரி நீர் திறப்பு

புழல் ஏரி பைல் படம்.

பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் 100 கன அடி உபரி நீர் இன்று மதியம் முதல் திறந்து விடப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நண்பகல் 100கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் ஏற்கனவே கடந்த மாதம் நிரம்பும் நிலைக்கு வந்தது. 20நாட்கள் உபரிநீர் வெளியேற்றப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இன்று காலை 6மணி நிலவரப்படி 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2386 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 140கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மாண்டஸ் புயல் காரணமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புழல் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து மீண்டும் 100கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 2மதகுகளில் ஒரு மதகின் வழியே உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags

Next Story