தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த தேசிய லோக்அதாலத்தில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, மோட்டார் வாகன விபத்து, குடும்பநல வழக்கு, காசோலை, குற்றவியல் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டன. மாவட்டம் முழுதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.செல்வசுந்தரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான பி.வி.சாண்டில்யன் அனைவரையும் வரவேற்றார். மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, மோட்டர் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிபதி கே.சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் ரமேஷ், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேலாரஸ், கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் முகழாம்பிகை , செல்வஅரசி, பவித்ரா உள்ளிட்டோர் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தனர்
. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருவள்ளுர் மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான பி.வேல்முருகன் பார்வையிட்டு பயனாளிகளுக்கு மக்கள் நீதிமன்ற தீர்ப்புரைகளை வழங்கினார். இதில் 3647 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 22 கோடியே 85 லட்சத்து 14 ஆயிரத்து 462 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu