செங்குன்றம் அருகே கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை
X
தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள்.
செங்குன்றம் அருகே கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பகத்சிங் தனது மகன் முருகேசன் (45), மருமகள் ஜெயந்தி (43) மற்றும் பேரக்குழந்தைகளோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முருகேசன் ஆன்லைன் வர்த்தக வர்த்தகமும் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டை பகுதியில் சொந்தமான வீடும் ஒன்று உள்ளது. வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு விட்ட நிலையில் மற்றொரு பகுதியில் முருகேசன் மற்றும் பகத்சிங் ஆகியோர் அவ்வப்போது வந்து தங்கி விட்டு செல்வது வழக்கம். நேற்று முருகேசன் தமது மனைவி ஜெயந்தியுடன் எல்லையம்மன் பேட்டை பகுதியிலுள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இன்று காலை இருவரும் வீடு திரும்பாததால் முருகேசனின் தந்தை பகத்சிங் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் தமது மகனை தொடர்பு கொள்ள முடியாதால் வீட்டின் அருகே வசிப்பவர்களுக்கு பகத்சிங் தகவல் கொடுத்து வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார். இதன் அடிப்படையில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் பகத்சிங் வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியே பார்த்த போது முருகேசனின் மனைவி ஜெயந்தி, முருகேசன் இருவரும் தூக்கிட்ட நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தூக்கிட்ட நிலையில் இருந்த கணவன் மனைவி இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால் முருகேசன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தால் முருகேசனுக்கு கடன் தொல்லை அதிகரித்து வந்துள்ளது. கடன் தொல்லை காரணமாகவே முருகேசன் தமது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து செங்குன்றம் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story