புழல் சிறையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா, செல்போன் சிக்கியது

புழல் மத்திய சிறை (கோப்பு படம்).
புழல் தண்டனை சிறையில் காவலர்கள் சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதியை சந்திக்க வந்த உறவினர் பற்பசைக்குள் ஸ்ட்ரா மூலம் மறைத்து கடத்த முயன்ற கஞ்சாவும் சிக்கியது.
திருவள்ளூர் மாவட்டம் சென்னை புழல் தண்டனை சிறையில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 900க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை பிரிவில் உள்ள கைதிகளிடம் சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் செல்போன்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சிறைக்காவலர்கள் சிறைக்குள் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது உயர் பாதுகாப்பு தொகுதி பின்புறம் உள்ள ஒரு மரத்தின் அடியில் ஒரு செல்போன், சிம்கார்டு, பேட்டரி, சார்ஜர் புதைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிறை கைதிகளிடம் தொடர் சோதனை மேற்கொண்டனர். இதில் திருட்டு வழக்கில் தண்டனை பெற்று வரும் வசந்தகுமார், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள பாலாஜி ஆகிய இருவரும் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த தலா 5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியை சந்திப்பதற்காக அண்ணாநகரை சேர்ந்த நவீன்குமார் என்பவர் சோப்பு, பேஸ்ட், பிஸ்கட், ரொட்டி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் வந்தார். அப்போது சிறை காவலர்கள் பொருட்களை தீவிர சோதனை செய்ததில் பற்பசைக்குள் ஸ்ட்ரா மூலம் மறைத்து சிறைக்குள் உள்ள கைதிக்கு கடத்த முயன்ற 3கிராம் கஞ்சாவும் சிக்கியது. இந்த 3சம்பவங்கள் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu