இணையம் மூலம் வேலைவாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் பணம் மோசடி

புழலில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி டெலிகிராம் குழுவில் இணைய வைத்து இளம்பெண்ணிடம் 42,805 ரூபாய் ஆன்லைன் மூலம் மோசடி நடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழலை சேர்ந்த இளம்பெண்ணான ஜெயசரண்யா (32) வாட்சப் எண்ணிற்கு அண்மையில் பகுதி நேர வேலை வாய்ப்பு வேண்டுமா, என வந்த குறுஞ்செய்திக்கு வேண்டும் என ஜெய சரண்யா பதிலளித்துள்ளார். இதனையடுத்து அவரது வாட்சப்பிற்கு டெலிகிராம் செயலியின் குழு இணைப்பு அனுப்பப்பட்டு அதில் இணையுமாறு கூறியதையடுத்து இணைப்பை அழுத்தி அதில் இணைத்து கொண்டார்.
குழுவில் இணைந்த பிறகு மேலும் ஒரு இணைப்பை பின்பற்றுமாறு வந்த தகவலை தொடர்ந்து அந்த இணைப்பில் சென்றார். அப்போது மூன்று டாஸ்குகள் நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.1000 செலுத்தினால், ரூ.1300 திரும்ப கிடைக்கும் எனவும், ரூ.5000 மற்றும் ரூ.5800 அனுப்பினால் ரூ.14330 கிடைக்கும் என கூறியதால் அந்த பணத்தை ஜெயசரண்யா செலுத்திய பின்னர் அவரது கணக்கிற்கு மீண்டும் பணம் திரும்ப வந்துள்ளது.
தொடர்ந்து ரூ.42805 அனுப்பினால் 57000ரூபாய் பணம் திரும்ப கிடைக்கும் என தெரிவித்ததன் பேரில் ஜெயசரண்யா 42805ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி அனுப்பாமல் மேலும் 92000ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயசரண்யா போலியான நிறுவனத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, 1930மூலமாகவும், புழல் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் ஐபிசி 420, 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66டி என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி மற்றும் இணைய வழி குற்றம் என்பதால் குற்றப்பிரிவு மற்றும் சைபர் பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும் மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu