ஆரணி அருகே விமரிசையாக நடந்த திரௌபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா

ஆரணி அருகே திரெளபதி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதி விழாவில் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கினர்.
ஆரணி அருகே போந்தவாக்கம் கிராமத்தில் ஸ்ரீதர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலயதீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீதர்மராஜா சமேத திரெளபதியம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாள்தோறும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர், குங்குமம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்களும் சந்தன அலங்காரமும்,சிறப்பு ஆராதனைகளும் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனையடுத்து சுமங்கலி பூஜை,பெண்கள் முளைப்பாரி எடுத்தல், காளியம்மன் பால்குடம் ஏந்தி வழிபாடு, பகாசூரன் சம்ஹாரம், திரெளபதி அம்மன் அர்ஜுனன் திருக்கல்யாணம் கிராமத்தார் சீர்வரிசியோடு நடைபெற்றது. அம்மன் திருவீதி உலா நச்சுக்குழி யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை உற்சவர் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புனித நீராடிய பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் 187க்கும் மேற்பட்டோர் புனித நீராடி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
இதில் சுற்று வட்டார பகுதிகளிருந்து 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu