36 நரிக்குறவர் பெண்களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டைகள் வழங்கல்

நூறு நாள் வேலை திட்ட அட்டைகளை பெற்ற நரிக்குரவர் இன பெண்கள்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அணைக்கட்டு பகுதியில் உள்ள மறுமலர்ச்சி நகரில் கடந்த 28 ஆண்டுகளாக நரிக்குறவர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். எந்த ஆதாரமும் இன்றி இருந்த 80 நரிக்குறவர் குடும்பத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 46 குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டாக்களை பெற்றுத் தந்துள்ளனர். விடுபட்ட குடும்பங்களுக்கும் வீட்டு மனை பட்டாவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வேலை வாய்ப்பு ஏதுமின்றி வறுமையில் வாழும் மக்கள் தங்கள் வறுமையை போக்க நூறு நாள் வேலை வேண்டும் என பல முறை முயற்சித்தும், ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து மாதர் சங்கத்தின் கிளை துவங்கிய பிறகு, முதல் கோரிக்கையாக நூறு நாள் வேலைக்கான அட்டைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
உடனடியாக எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதர் சங்கம் சார்பில் மனு அளித்தனர்.மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் 36 நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு நூறு நாள் வேலைக்கான அட்டைகளை வழங்கினர். இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.பத்மா, ஊத்துக்கோட்டை வட்ட தலைவர் எஸ்.புஷ்பலதா, வட்டச் செயலாளர் எஸ்.ரம்யா, கிளை தலைவர் மேரி, செயலாளர் ராசாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu