வளர்ப்பு நாயை கடித்த தெரு நாய்களுக்கு விஷம் வைப்பு: போலீஸ் விசாரணை

வளர்ப்பு நாயை கடித்த தெரு நாய்களுக்கு விஷம் வைப்பு: போலீஸ் விசாரணை
X

உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இரண்டு நாய்கள்.

பூந்தமல்லி அருகே இரண்டு நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

திருவேற்காட்டில் வளர்ப்பு நாயை கடித்த தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி திருவேற்காடு அடுத்த பெருமாளகரம் புளூட்டோ தெருவை சேர்ந்தவர் மோகன்( வயது 53), இவரது வீட்டில் தெரு நாய்கள் சிலவற்றை வைத்து வளர்த்து வந்தார். அவைகளுக்கு வேண்டிய உணவுகளை தினந்தோறும் தவறாமல் வைத்து பராமரித்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே வசிக்கக்கூடிய பாலாஜி என்பவர் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய் வீட்டை விட்டு தெருவில் வந்த நிலையில் தெரு நாய் ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி தன் நாயை தெரு நாய்கள் கடித்த கோபத்தில் இரவு நேரத்தில் உணவில் எலி மருந்தை கலந்து வைத்துள்ளார். அதனை உட்கொண்ட இரண்டு நாய்கள் இறந்து போனதை கண்டு மோகன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்ததில் திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷம் வைத்து கொல்லப்பட்ட இரண்டு நாய்களை பிரேத பரிசோதனைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் செல்லமாக வளர்த்த தெரு நாய்களை நபர் ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் குறித்து அதன் உரிமையாளர் பேச முடியாமல் கண் கலங்கியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதையடுத்து பாலாஜியிடம் திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story