பொன்னேரி அருகே ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை

பொன்னேரி அருகே ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை
X

பொன்னேரி அருகே ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பொன்னேரி அருகே ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பொன்னேரி அருகே அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 42ஆம் ஆண்டு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் விளக்குகள் ஏந்தி ஐயப்ப சரண கோஷத்துடன் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவேங்கடாபுரத்தில் உள்ள அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 42ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு திருவேங்கடாபுரத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் விழா தொடங்கியது. இதில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்குகளை கையில் ஏந்தியபடி ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் முழங்க சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் வரை ஊர்வலமாக சென்று ஐயப்பனை வணங்கினர்.

ஊர்வல சுற்றுப்பாதையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விளக்கு பூஜையின் போது நடைபெற்ற இரவை பகலாக மாற்றிய வான வேடிக்கைகள் காண்போரை வியக்க வைத்தது. கேரள பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் மற்றும் பக்தர்களின் சரண கோஷம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த திருவிளக்கு பூஜையில் திருவேங்கடாபுரம், வெண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare